Ad Widget

வட்டுக்கோட்டை பெண் கொலையுடன் தொடர்புடைய இருவருக்கு விளக்கமறியல்

பொன்னாலை வீதி கொத்தாத்துறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, ஞாயிற்றுக்கிழமை (17) உத்தரவிட்டார்.

வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடியை சேர்ந்த பாலசுப்பிரமானியம் யோகேஸ்வரி (வயது 34) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். பெண்ணின் கழுத்தில் வெட்டுக்காயம் காணப்பட்டதுடன், சடலத்தின் அருகில் சந்தேகநபர்கள் விட்டு சென்ற தடயப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.

சான்று பொருட்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொறுப்பதிகாரி எஸ்.எ.எஸ்.சி.சத்துருசிங்க தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர், அளவெட்டி பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நபர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரியின் கணவன் (வயது 42) ஆகியோரை கைது செய்திருந்தனர்.

கைதான சந்தேகநபர்கள், சட்டவைத்திய அதிகாரியினால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவ அறிக்கையுடன் நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

பெண்ணின் கணவன், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் இறந்துள்ளார். இதன்பின்னர் அதேயிடத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை பெண் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டுச் சென்றுள்ளனர்.

எனினும் இவர்களை கடந்த 10ஆம் திகதி பிடித்த உறவினர்கள் இருவரையும் எச்சரிக்கை செய்து, பிரித்து வைத்துள்ளனர். இந்நிலையில் 11ஆம் திகதி பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related Posts