Ad Widget

வட்டுக்கோட்டை இளைஞனைக் கடத்துவதற்கு உதவிய கடற்படை!!

வட்டுக்கோட்டையில் இளைஞனைக் கடத்திக் கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம்சாட்டிய நிலையில், இளைஞனைக் கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் அதிர்ச்சி காணொலி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

தனது மனைவியுடன் காரைநகருக்கு கடந்த திங்கட்கிழமை உந்துருளியில் சென்று விட்டு, வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும், அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியிலுள்ள கடற்படை முகாமுக்கு அருகில் வைத்து, வன்முறைக் கும்பல் ஒன்றால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

கடத்திச் சென்ற இளைஞனின் மனைவியை சித்தன்கேணியில் இறக்கி விட்டு வன்முறைக் கும்பல் தப்பிச் சென்றிருந்தது.

வன்முறைக் கும்பல் தம்மை வழிமறித்து, தாக்கிக் கடத்த முற்பட்ட வேளை, தாம் உதவி கோரி கடற்படை முகாமுக்கு சென்ற வேளை அங்கிருந்த கடற்படையினர் தம்மைத் தாக்கி விரட்டினர் எனவும், தனது கணவரின் படுகொலைக்கு கடற்படையினரும் காரணம் என படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் மனைவி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா காணொலிகளை புலனாய்வாளர்கள் பெற்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

காணொலியில், இளைஞனும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களைத் தாக்குவதும், வன்முறைக் கும்பல் கடற்படையினர் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்து கணவன், மனைவியைக் கடத்திச் செல்வதும் பதிவாகியுள்ளது.

கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல் காரர்களுக்கு உதவி செய்வது காணொலியில் தெளிவாகப் பதிவாகியுள்ள நிலையில் கடத்தலுக்கு கடற்படையினர் உதவினார்கள் என மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொலி வலுச்சேர்ந்துள்ளது

Related Posts