Ad Widget

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம்: கடற்படையினரிடம் விசாரணை!!

வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில் கடற்படையினரின் முன்நிலையில் இளைஞன் தாக்கப்பட்டு கடத்தப்படுகின்ற சிசிரிவி காணொளிக் காட்சிகள் நேற்றையதினம் வெளியாகியிருந்தன.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சியில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது கடற்படையினர் ஏதேனும் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை கடற்படை முகாமிற்கு அருகில் ஒரு தம்பதியினர் கொடூரமாக தாக்கி கடத்திச் செல்லப்பட்ட நிலையில், கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதன்போது குறித்த தம்பதியினர் பாதுகாப்பு தேடி கடற்படை முகாமுக்குள் சென்றவேளை அவர்களை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

அத்துடன் வன்முறைக்குழுவினரால் இளைஞன் கடத்தப்படும் போது கடற்படையினர் அதனை தடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts