Ad Widget

வட்டுக்கோட்டை இளைஞனின் உயிரிழப்பு : அடையாள அணிவகுப்புத் திகதியில் மாற்றம்!

பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார்.

அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கடந்த வழக்கு தவணையில், நேற்றைய தினம் அடையாள அணிவகுப்பு திகதியிடப்பட்டது. அந்நிலையில் , வழக்கின் பிரதான சாட்சியமான, உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் மன்றில் சமூகமளிக்காத நிலையில், அடையாள அணிவகுப்புக்கு 08 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன் போது சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் , அடையாள அணிவகுப்பு சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்தும் போது சந்தேகநபர்களுடன் முன்னிலைப்படுத்தப்படும் ஏனைய நபர்கள் சந்தேக நபர்களின் தோற்றத்தை ஒத்தவர்களாவும், பொலிஸ் உத்தியோகஸ்தர்களாகவும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts