Ad Widget

வட்டுக்கோட்டையில் முகநூல் ஊடாக மிரட்டி கப்பம் பெற்ற நபர் கைது!

குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனுடன் , போலி முகநூல் ஊடாக அறிமுகமான நபரொருவர் , மாணவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தையே கொலை செய்ய போவதாக முகநூல் ஊடாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரியுள்ளார்.

அதற்கு மாணவன் கப்பம் செலுத்த தயாராகியுள்ளார். அதற்கு அந்நபர் பணத்தினை வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள இடம் ஒன்றினை குறிப்பிட்டு , அங்கு பணத்தினை வைத்து விட்டு செல்லுமாறு பணித்துள்ளார். அதற்கு மாணவனும் சம்மதித்து , வீட்டில் இருந்த பணத்தை வீட்டாருக்கு தெரியாமல் எடுத்து சென்று அவ்விடத்தில் வைத்துவிட்டு வந்துள்ளார்.

அவ்வாறாக சில நாட்களாக குறித்த நபர் மாணவனை மிரட்டி பணம் பெற்று வந்த வேளை , பணம் இல்லாத நேரங்களில் வீட்டிலிருந்து நகைகளையும் எடுத்து சென்று மாணவன் கொடுத்துள்ளான்.

இந்த சம்பவம் சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் , வீட்டில் இருந்து நகைகள் , பணம் என்பவை காணாமல் போவதை பெற்றோர் கண்டறிந்து மாணவனிடம் கேட்டுள்ளனர். அதன் போதே மாணவன் சம்பவத்தை தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பெற்றோரால் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மிரட்டல் விட்டு கப்பம் பெற்று வந்த நபரை கைது செய்தனர்,

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவனிடம் இருந்து , 3 மோதிரங்கள் , 3 சங்கிலிகள் , 3 காப்பு , ஒரு சோடி தோடு உள்ளிட்ட தங்க நகைகளுடன் , 2 இலட்சத்து 10ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கப்பமாக பெற்று இருந்தமையை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அந்நிலையில் குறித்த நபர் , மாணவனை தவிர வேறு நபர்களையும் அவ்வாறாக மிரட்டி கப்பம் பெற்று வருகின்றாரா ? வேறு மோசடி சம்பவங்களிலும் தொடர்புகள் உண்டா ? எனும் கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts