Ad Widget

வடமாகாண சபை அமைந்தால் தனி நாட்டுப் பிரகடனம் உறுதி என்கிறார் மேத்தானந்த தேரர்

வடமாகாணசபை அமைந்தால் தனி ஈழத்துக்கான நகர்வுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் முன்னெடுக்குமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே, பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அரசு உடனடியாக அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எல்லாவெல மேத்தானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இது விடயத்தில் அரசு இனியும் காலம் கடத்து மானால், அன்று வரதராஜப் பெருமாள் தனி ஈழப் பிரகடனத்தை அறிவித்தது போல் கூட்டமைப்பும் தனி நாட்டுக்கான பிரகடனத்தை முன்வைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

13ஆவது அரசமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படவேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் முன்வைத்துள்ள கருத்துக்கு அரச தரப்பில் ஆதரவு வலுத்துவரும் நிலையிலேயே அரசின் பங்காளியான எல்லாவல மேதானந்த தேரரும் கோட்டாவின் கூற்றுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் பாதுகாப்புச் செயலாளரின் கூற்றை வன்மையாகக் கண்டித்திருந்தாலும், அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தரப்பின் முக்கிய புள்ளிகள் அதனை வரவேற்றுள்ளனர்.

இதனால் இந்த “13′ விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், 13ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட எல்லாவல மேதானந்த தேரர் மேலும் கூறியவை வருமாறு:

13ஆவது அரசமைப்புத் திருத்தம் நாட்டின் அபிவிருத்திக்கும், நிர்வாகத்துக்கும் தடங்கலாக உள்ளது. எனவே, அரசு அதை உடனடியாக அரசமைப்பிலிருந்து நீக்கவேண்டும்.

மறுபுறத்தில், தனிநாட்டுக்கு வழிகோலும் வகையில் குறித்த திருத்தம் அமைந்துள்ளது. அதை உடன் நீக்காவிட்டால் நாடு கூறுகளாகப் பிளவுபடும் அபாயநிலையும் உள்ளது.

ஏனெனில், 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட தனிநாட்டுக்கான விடயங்கள் உள்ளன. சிலவேளை, வடமாகாண சபை அமைந்தால் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி ஈழத்துக்கான பிரகடனத்தை முன்வைக்கலாம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்க முடியாது.

ஏலவே, 13ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் விடயத்தில் அரசு அசமந்தமாக இருந்தால் அன்று வரதராஜபெருமாள் செய்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை நிச்சயம் செய்யும். இதனால், இந்த அபாயநிலைக்கு 13ஐ நீக்குவதே ஒரே தீர்வாக அமையும் என்றார்.

Related Posts