Ad Widget

வடமாகாண கல்வி அமைச்சரால் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு புதிய சிக்கல்

வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுத்தமைக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

மாகாண அமைச்சர்கள் அரசியல் அமைப்பை ஏற்பதாக சத்தியபிரமாணம் செய்துள்ள நிலையில், வடமாகாண கல்வி அமைச்சரின் இந்த செயல் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

வடக்கு முதல்வர் தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு தொடர்பில் ஜெனிவா உள்ளிட்ட நாடுகளில் பேசினாலும் அவரின் கீழ் உள்ள அமைச்சர் ஒருவர் அந்த கொள்கைகளுக்கு எதிராக நடந்துக்கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தேசியக் கொடி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

வவுனியா ஈரப்பெரியகுளம் பரகும்பா மகாவித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்ட வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனுக்கு தேசியக் கொடியை ஏற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தேசிய கொடியை ஏற்றுமாறு வட மாகாணசபை உறுப்பினர் ஏ.ஜயதிலகவை கோரியிருந்தமை குறிப்பிடதக்கது.

Related Posts