ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மீண்டும் பதவி நீடிப்புச் செய்யப்பட்டுள்ள வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
பத்ரமுல்ல பகுதியில் அமைந்துள்ள ஆளுனரது கொழும்பு அலுவலகத்தில் நேற்றைய தினம் (13) மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடந்த காலங்களில் எமது மக்களுக்கான தங்களது சேவை எவ்வாறு சிறப்பாக இடம்பெற்றிருந்ததோ, அதேபோன்று எதிர்காலங்களிலும் தொடரவேண்டும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பும் வகையில் என்னோடு இணைந்து பல்வேறு அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள். அதற்காக எமது மக்களின் சார்பில் தங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் கல்வி, விளையாட்டு, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் முன்னேற்றங்களுக்கு தாங்கள் ஆற்றிவந்த பங்கு பணிகள் மகத்தானவை.
எனவே, எதிர்காலங்களிலும் மஹிந்த சிந்தனைக்கு அமைய அரசின் கொள்கைத் திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கும் அதேவேளை, உங்கள் சேவை மூலம் வடமாகாணம் சகல துறைகளிலும் மேலும் முன்னேற்றமடைய வேண்டும் எனத் தாம் வாழ்த்துவதாகவும் அமைச்சர் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.
இம்மாதம் 11ம் திகதியுடன் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களது பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அவரது சேவைக்காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீடிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.