Ad Widget

வடமாகாண ஆளுநர் சிறந்த நிர்வாகியாவார்: றிப்கான் பதியுதீன்

alunar-chanthera-sri--1வடமாகாணத்தில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்ற ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி சிறந்த நிர்வாகியாக காணப்பட்டுள்ளார் என உறுப்பினரும், எதிர்கட்சி பிரதம கொறடாவுவமான றிப்கான் பதியுதீன் தெரிவத்தார்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கேட்போர் கூடத்தில் சபை முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று இடம்பெற்ற மாகாணசபை அமர்வுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர், ‘வடமாகாண மக்களின் வாழ்வாதார மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மிகவும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதை நாம் இந்த சபையில் பாராட்டுகின்றோம். எவ்வித இனப்பாகுபாடுகளுமின்றி நேர்மையுடனும் மற்றும் வெளிப்படை தன்மையின் மூலம் அவரது சேவை அமைந்துள்ளது.அவருக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த தீர்மாணம் தொடர்பில் இந்த சபையில் நான் அவரது பணியினையினையும் பாராட்ட வேண்டும்’ என்றார்.

‘குறிப்பாக தற்போதைய ஆளுநரை தவிர்த்து எதிர்காலத்தில் ஆளுநராக எவராவது நியமிக்கப்படுவார்களானால் அந்த நியமனம் இராணுவத் தரப்பில் இருந்த ஒருவராக இடம் பெறக் கூடாது என்ற விடயத்தினை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது என்பதை தெரிவிப்பதாகவும், எனினும் தற்போதைய ஆளுநரின் பணிகள் பாராட்டுக்குரியது’ என்றும் அவர் தெரிவத்தார்.

‘இந்த சபையில் சிலர் பதாகைகைளை ஏந்தி காணிப் பிரச்சினை தொடர்பில் அவற்றை சுட்டிக்காட்டுகின்றனர். இந்த காணிப் பகிர்வில் தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் இங்கு வாழ்ந்த சிங்கள மக்களது பிரச்சினைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதேவேளை சபைக்குள் உறுப்பினர்கள் கௌரவமான வசனங்களை பயன்படுத்துவதன் மூலம் இந்த சபையின் கௌரவத்தை பாதுகாக்க முடியும். வாக்களித்த எமது மக்களுக்கும் நாங்கள் பணியாற்றவே வந்திருக்கின்றோம், அவர்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை. இதில் இனபாகுபாடுகள் பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.

அடுத்த ஆண்டின் வடமாகாண அமைச்சுக்களுக்கும், அமைச்சர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி தொடர்பில் சரியான விபரங்களை தெரிவிக்க வேண்டும்’ என்று றிப்கான் பதியுதீன் மேலும் கூறினார்.

Related Posts