Ad Widget

வடமாகாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகரிப்பு

வடமாகாணத்தில் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் கடந்த 2014 வருடத்தில் அதிகரித்துள்ளதாக வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் ரீ.விஸ்பரூபன் இன்று தெரிவித்தார்.

t-vishwaruban

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இவ்வாறான சமூக, கலாச்சார சீரழிவுகள் இடம்பெற்று வருகின்றன. கடவுள் நம்பிக்கை இல்லாது இளைஞர்கள் தவறான வழியில் செல்வதனால் அவர்களுக்குரிய கட்டுப்பாடு இல்லாமல் இருக்கின்றது. இதனால் சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த முடியாமல் போகின்றது.

வடமாகாணத்தில் கடந்த வருடம் சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு வகையான 958 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. 150 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாகியும், 57 சிறுவர் பாலியல் துன்புறுத்தல் முயற்சியில் பாதிக்கப்பட்டும், 118 சிறுவர்கள் பாலியல் சேட்டைக்கு உட்படுத்தப்பட்டும், 56 சிறுவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியும் உள்ளனர்.

அதனைவிட, 122 சிறுவர்கள் புறக்கணிக்கப்பட்டும், 14 சிறுவர்கள் கடத்தப்பட்டும், 6 சிறுவர்கள் நெருக்கடிகளுக்குள்ளாகியும், 40 சிறுவர்கள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியும், 71 சிறுவர்கள் தனித்து வாழ்ந்தும், 66 சிறுவர்கள் இளவயதுத்திருமணம் செய்தும், 22 சிறுவர்கள் குடும்பங்களின் பாரங்களை சுமந்தவாறும், 198 சிறுவர்கள் வேறு துன்புறுத்தல் நடவடிக்கைகளுக்குள்ளாகியும் உள்ளனர்.

26 சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சித்தும், 12 பேர் தற்கொலை செய்தும் உள்ளனர். சிறுவர் பாலியல் சேஷ்டைகள், புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள், தனித்திருக்கும் சிறுவர்கள், இளவயது திருமணம், குடும்பங்களில் பாரத்தை சுமத்தல் ஆகியவற்றில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சிறுவர்கள் அதிகளவாக காணப்படுகின்றனர்.

சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றது. இவர்களுக்குரிய மாற்று நடவடிக்கைகளை உரிய மாவட்ட, பிரதேச செயலகங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடாக மேற்கொண்டு வருகின்றோம்.

அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து சிறுவர்களின் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தி, சிறுவர்களுக்கான சமுதாய கட்டமைப்புக்களை ஒழுங்கு முறையில் சீர்செய்து சிறுவர்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்தார்.

Related Posts