Ad Widget

வடமராட்சி கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் அட்டூழியம்!!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள் பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

“பருத்தித்துறை சுப்பர்மடம் இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக இன்று அதிகாலை படகில் சென்றேன்.

அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது 20 வலைகளை அவர்கள் அறுத்து எடுத்திருந்தனர்.

வலைகளைத் தருமாறு கேட்டேன். இந்திய மீனவர்கள் கற்களால் எனது படகை நோக்கி எறிந்தனர். தமக்கு அருகே வந்தால் தாக்குதல் நடத்துவோம் என்று இந்திய மீனவர்கள் மிரட்டினார்கள்.அவர்கள் முகத்தை தெரியாதவாறு துணி கட்டியிருந்ததுடன், கொட்டன்களை வைத்திருந்தனர்.

பல மணிநேரம் வலைகளைக் கேட்டு காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளேன்.

சுமார் 3 லட்சம் ரூபாய் வலைகளை இழந்துள்ளேன்” என்று பாதிக்கப்பட்ட மீனவரான சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளார்.

Related Posts