Ad Widget

வடமராட்சியில் மீனவ படகு தீக்கிரை: பெரும்பான்மை இனத்தவரை எதிர்த்ததன் எதிரொலியா?

வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் மீனவ படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரமும் இனந்தெரியாதோரால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது.

தாளையடி பகுதியில் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்றே இவ்வாறு நேற்று (திங்கட்கிழமை) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி கடலட்டை பிடித்து வருகின்ற நிலையில் அதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலை கடுமையாக எதிர்த்த ஒருவரது படகே நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கை மீனவர்களை சுற்றிவளைத்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்த வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகும் கடந்த வாரம் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts