Ad Widget

வடக்கு மாகாண சபை குறித்து தென்னிலங்கை அரசே புரளி கிளப்புகிறது

மாகாண சபை அதிகாரங்களை தொடர்ந்தும் தன்னகத்தே வைத்திருப்பதை நோக்காகக் கொண்டு, மத்திய அரசானது வட மாகாண சபை திறனற்று செயற்படுவதாக புரளியை கிளப்பி வருகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள வடக்கு முதல்வரிடம், வடக்கு மாகாண சபை திறனற்று செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றதே என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அத்தோடு, கையாடல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள வடக்கு மாகாண அமைச்சர்களுள் ஒருவரான பொ.ஐங்கரநேசனிடம் பதில் முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துள்ளமையானது மக்களிடம் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தாதா என்றும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளிக்கும்போதே வடக்கு முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, ஐங்கரநேசன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றம் இழைத்தவராக ஆகிவிட முடியாதென குறிப்பிட்ட வடக்கு முதல்வர், அவர் மீதான குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு தம்முடன் கனடா விஜயத்தில் ஈடுபட்டவர்களை விடுத்து, வடக்கு மாகாணத்தில் தற்போது உள்ளவர்களில் மூத்த அமைச்சர் என்ற ரீதியிலேயே தாம் அவரிடம் பிரதி முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்ததாக மேலும் குறிப்பிட்டார்.

Related Posts