Ad Widget

வடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்!

வடக்கு மாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய இறுதி அமர்வில் குறித்த கீதம் ஒலிக்கவிடப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பமான வடக்கு மாகாண சபையின் 5 வருடங்களைக் கொண்ட ஆட்சிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதன் இறுதி அமர்வு நடைபெறுகிறது.

அந்தவகையில், வடக்கு மாகாண சபைக்கென ஒரு கீதம் இல்லாத நிலையில், அது உருவாக்கப்பட்ட இன்று சபையில் அங்கீகாரம் பெறப்பட்டது.

இலங்கையின் தேசிய கீதம் இரு மொழிகளில் உள்ளதைப் போன்று, வடக்கு மாகாண கீதமும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் அமைய வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக உள்ளிட்டோர் இதன்போது கேட்டுக்கொண்டனர். இதற்கு ஏனைய உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டபோது சபைக்கான கீதம் உள்ளிட்ட அடிப்படை விடயங்கள் எவையும் இருக்கவில்லை. அதன் பின்னர் செங்கோல், அவை வடிவமைப்பு, ஆசனம் போன்ற அனைத்தும் வடிவமைக்கப்பட்ட நிலையில், இன்று கீதமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts