Ad Widget

வடக்கு மாகாணத்தின் கலாசாரம் அபாய நிலையில் இருக்கிறது: சர்வேஸ்வரன்

வடக்கு மாகாணத்தினுடைய அடையாளம், கலாசாரம் என்பன தற்போது அபாய நிலையில் இருப்பதாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் வடமராட்சி கரவெட்டி வேதாரணியேஸ்வர வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சைவத்தையும்,தமிழையும் காப்பதற்காக எமது முன்னோர்களால் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இன்று நாம் நூற்றாண்டு விழாவை கொண்டாடிக்கொண்டிருக்கிறேம்.

வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் வட பகுதியில் எமது கலாச்சாரமும்,அடையாளங்களும் எவ்வாறு அழிக்கப்பட்டதோ அதைவிட மேலாக இன்று வடபகுதியில் எமது கலாச்சார அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சூழலில் இப்படியான ஒரு பாடசாலை நூற்றாண்டை காண்பது வரவேற்கத்தக்கது. இந்தப்பாடசாலை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அதே நோக்கத்திற்காக இங்கிருக்கின்ற எல்லாப்பாடசாலைகளும் எமது அடையாளங்களையும்,கலாச்சாரத்தினையும் காப்பாற்ற பாடுபடவேண்டும்.

எங்களுடைய அடையாளங்கள்,கலாச்சாரங்கள் அழிக்கப்படுகின்ற நிலை,எங்களுடைய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பொருளாதாரத்தில் நாங்கள் ஓரம் கட்டப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

துப்பாக்கி முனையில் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவம் என்ற நிலையில் எங்களை அடக்கி வைத்துக்கொண்டு இதை ஒரு சிங்கள பௌத்த பூமியாக மாற்றுகின்ற நிலையிலிருந்து நாங்கள் எங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அதற்காக நாங்கள் நவீனங்கள் என்று கூறிக்கொண்டு புதிய விடயங்களை உள்வாங்குவது தவறானதல்ல. ஆனால் எங்களுடைய பாரம்பரிய பண்புகளை மறந்து அதனை அழித்து விடக்கூடாது.

அந்த வகையில் ஒவ்வொரு பாடசாலைகளும் எங்களுடைய கலாச்சாரங்களை, பண்பாடுகளை பாதுகாக்கின்ற பாடசாலைகளாக மாற வேண்டும்” என அமைச்சர் க.சர்வேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts