வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச கடல்நீரை நன்னீராக்கி யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை புதன்கிழமை மருதங்கேணி பிரதேசத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மருதங்கேணி கடற்றொழிலாளர் சங்கங்கள். வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவுள்ளன.
வடமாகாண சபையால் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தால் தங்களில் மீன்பிடி பாதிக்கப்படவுள்ளதுடன், சூழல் பாதிப்புக்களும் ஏற்படும். இதனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனக் கோரியே இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் மருதங்கேணி பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.