Ad Widget

வடக்கு தேர்தல் வன்முறைகள் குறித்த அறிக்கை ஐநா செல்கிறது!

வடமாகாண சபை தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் நடைபெற்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் நிறைவேற்று அதிகாரியும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

jaffna-press-meet

யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலையே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் மாநாடு ஆனது நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான இறுதி அறிக்கையை ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதில் நிறைவேற்று அதிகாரியின் சாராம்ச அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடமாகாணத்தில் சிவில் நிர்வாகத்தின் முழுமையான மீள் திரும்பளுக்கான சாத்தியத்தையும் ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் ஐக்கியம் என்பவற்றை கருத்தில் கொண்டு இத் தேர்தல் தேசியளவிலும் சர்வதேச அளவிலும் வரவேற்கப்பட்டது.

இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் சபையின் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை பெற்று கொண்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்று கொண்டது. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 7.5 வீதம் நிராகரிக்கப்பட்டதுடன் வாக்களிப்பு வீதம் 67.52 வீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 27 கடுமையான சம்பவங்களும் 57 சிறு சம்பவங்களையும் தே.வ.க.நி. பதிவு செய்தது அநேகமான சம்பவங்களில் இனம்காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.ம.சு.மு. கட்சியோடு தொடர்புபட்டவர்களே.

தேர்தல் தினத்தன்று பதிவு செய்யப்பட்ட 34 கடுமையான சம்பவங்களில் 13 சம்பவங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக ஐ.ம.சு.மு. இனம்காணப்பட்டது. 18 சம்பவங்களில் குற்றமிழைத்தவர்களின் கட்சி தொடர்புகள் இனம் காணப்படவில்லை.

பொது மக்களது நாளாந்த வாழ்க்கையிலான இராணுவ மயப்படுத்தலில் அளவு தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வாக்களித்தல் நடைபெற்ற சூழமைவில் அது ஊடுருவி நிலைநாட்டப்படிருந்தமைக்கு சான்று பகிர்ந்தன.

இராணுவ மயப்படுத்தல் தேர்தல் செயன்முறைகளுக்கு தெளிவாகவே குந்தகம் ஏற்படுத்தியது. எனினும் மொத்த வாக்களிப்பு வீதமும் அதன் பெறுபேறும் ஓர் பிரசித்தமான எதிர்தாக்கத்தையே எடுத்துரைத்தது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலும் இராணுவத்தை அகற்றுவதாக சொல்லப்பட்டுள்ளது. தே.வ.க.நி.இந்த பரிந்துரையை எந்த தயக்கமும் இன்றி அங்கீகரிப்பதுடன் அதனை அமுல்படுத்துவதற்கும் அரசாங்கத்தை வேண்டிக் கொள்கின்றது.

சில செய்தி தளங்களுக்கு தடை ஏற்படுத்தியமை மற்றும் தவறான தகவல்களை பிரசுரித்தமை என ஊடகங்கள் மீது இடப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்தும் தே.வ.க.நி. கரிசனை கொள்கிறது.

வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்படாமையையிட்டு நாம் மிகுந்த வருத்தத்துடன் கவனத்தில் கொள்கின்றோம். தேர்தல் செயன்முறைகளை கண்காணிக்கும் சிவில் சமூகத்திற்கு இது முக்கிய தடையாகும்.

உள்ளூர் கண்காணிப்பாளர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கு ஆணையாளர் மற்றும் அரசியல் வாதிகளையும் கேட்டுக் கொள்வதுடன், சர்வதேச நியமங்களுடன் அவர்களது வகிபாகம் மற்றும் செயற்பாடுகளில் தெளிவான மற்றும் முழுமையான விளக்கத்துடன் தேர்தல் சட்டங்களில் அவர்களுக்கான அங்கீகரித்த்தலுக்கும் இணக்கமளிக்கவும்.

அச்சுறுத்தல்களையும் மற்றும் மிரட்டல்களையும் தைரியமாக எதிர்கொண்டு தங்களது வாக்குரிமையை அப்பியாசிப்பதற்கும் ஏனைய பல சாவால்களையும் வெற்றி கொண்டு பெரும் எண்ணிகையில் திரண்டு வந்த வடமாகாண வாக்காளர்களுக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகின்றோம்.

தேர்தல் செயன்முறைகளின் நேர்மை தன்மைக்கு குந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் இறுதி முடிவுகள் வாக்களர்களின் ஒட்டு மொத்த அபிலாசைகளையே பிரதி பலித்தது என்பதனையே இது உறுதிபடுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தேர்தல் தொடர்பான வன்முறை பற்றிய இந்த அறிக்கை வெறும் அறிக்கையிடல் மட்டும்தானா? எதிர்காலத்தில் தேர்தல் வன்முறைகளை தடுப்பதற்கு எடுத்துள்ள முயற்சி? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போது,

தேர்தல் காலத்தில் நடைபெற்ற வன்முறைகள் மற்றும் தேர்தல் முடிந்த பின்னர் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான இந்த அறிக்கை ஐ.நா மனித உரிமை போன்ற சர்வதேச அமைப்புக்களுக்கு சமர்ப்பிக்கப்படும் அதேவேளை அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும்.

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை நடைபெற்ற தேர்தலில் வன்முறைகள் குறைந்தளவிலையே பதியப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு சுயாதீனமான கண்காணித்தல் ஆணைக்குழுக்களுக்கான பதினேழாவது திருத்தத்தை மீள நிலை நாட்டுவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் பாக்கியசோதி சரவணமுத்து பதிலளித்தார்.

Related Posts