வடக்கு, கிழக்கு, வடமத்தியில் உஷ்ண எச்சரிக்கை!!

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பகல் வேளையில், வெப்பச் சுட்டெண், (மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை) ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் .

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 45 – 50 கி.மீ. வரை அதிகரிக்கக் கூடும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

புத்தளத்திலிருந்து காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இக்கடற்பரப்புகளில் கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கும் வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும், கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

Related Posts