வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு சி.வி.கே.சிவஞானம் அழைப்பு!

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் ராணுவ முகாம்கள் அமைந்திருப்பதன் காரணத்தினாலேயே இவ்வாறான பல தாக்குதல்கள் நடைபெறுகின்றன எனவும் இதை அடிப்படையாகக் கொண்டு வடக்கு கிழக்கிலே மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலே அமைந்திருக்கின்ற ராணுவத்தினரின் முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டின் நோக்கமாக நாங்கள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விட்டிருக்கின்றோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் ஒட்டுமொத்தமாக எங்களுடைய எதிர்ப்பினை காட்டுவது மட்டுமல்ல. ராணுவம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து விலக வேண்டும், வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த ஹர்த்தாலின் அடிப்படை நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் 18 ஆம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் அநேகமாக பகல்வேளை என்பதால் எந்த பிரச்சினையும் இருக்காது எனவும் குறிப்பாக மாலை நான்கு மணியுடன் ஹர்த்தால் நிறைவு பெறும் எனவும் எனவே ஹர்த்தால் வெற்றிகரமானதாக அமைய மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts