Ad Widget

வடக்கு கடலில் இந்திய மீனவர்கள் அட்டூழியம்

வடக்கு கடற்பரப்பில் புதன்கிழமை (25) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இந்திய மீனவர்களின் றோலர் படகுகள், இலங்கை மீனவர்களின் வலைகளை அறுத்து பாரிய சேதத்தை விளைவித்துள்ளன என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த மீனவர்களில் 150க்கும் மேற்பட்டவர்களின் வலைகளை றோலர்களில் வருகை தந்த இந்திய மீனவர்கள், நாசம் செய்தனர் என்று வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் நாகமுத்து நாகேஸ்வரன் தெரிவித்தார்.

எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களின் றோலர்கள் எமது வலைகளை அறுத்து எறிந்து அட்டகாசம் செய்தனர். நாங்கள் வலைகளை மீட்கச் சென்றவேளை, அவர்கள் கட்டைகளை கொண்டு எங்களை துரத்தினார்கள். கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, உடுத்துறை, ஆழியவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் வலைகளே இவ்வாறு நாசமாக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

இந்திய றோலர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் அதிகாரிகள் தற்போது கவனம் செலுத்துவதோ கைது செய்வதோ இல்லை. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம். அயல் நாடான இந்தியா எங்கள் வயிற்றில் அடிக்கக்கூடாது. எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவாம் என நாகேஸ்வரன் மேலும் கூறினார்.

இதேவேளை, முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா கூறினார்.

இது குறித்து அவர் மேலம் கூறியதாவது,

‘முல்லைத்தீவில் கொக்குளாய் தொடக்கம் நல்லதண்ணீர் தொடுவாய் வரையான எமது சமாச எல்லைப் பரப்பில் 26 சங்கங்கள் உள்ளன. சங்கங்களில் 6000 குடும்பங்கள் கடற்றொழிலையே நம்பி வாழ்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு சென்ற நாளில் இருந்து இந்திய றோலர்களின் அத்துமீறல் இங்கு அதிகரித்துள்ளது. நேற்றும் (புதன்கிழமை) கரையிலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் இந்திய றோலர்கள் அத்துமீறி மீன் பிடித்தன.

முல்லைத்தீவு மாவட்டச் செயலக கட்டடத்தை திறந்து வைக்க கடந்த 10 ஆம் திகதி வருகை தந்த உள்நாட்டலுவல்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் யோசப் மைக்கல் பெரேராவிடம் இந்திய றோலர்களின் நெருக்கடி தொடர்பாக மனுக்கையளித்தோம். 3 நாளில் தனது செயலாளரை அனுப்புவதாக அமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால் இன்றுவரை செயலாளர் வருகை தரவில்லை. அமைச்சரிடமிருந்தும் தகுந்த பதில் கிடைக்கவில்லை.

மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளரிடம் இந்திய றோலர்களை கட்டுப்படுத்துவதற்கு தகுந்த நடவடிக்கை எடுங்கள் என வலியுறுத்தியுள்ளோம். எதிர்வரும் 28ஆம் திகதி கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு சபைகளின் தேர்தல் நடைபெறவுள்ளமையால் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கும் முடியாதுள்ளது. கடற்றொழிலாளர்களின் நெருக்கடி நிலைக்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஆகியோர் விரைவான தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் கூறினார்.

Related Posts