Ad Widget

வடக்கு உள்ளூராட்சி, போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன் நீடிப்பார்!

“வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக சட்டப்படி பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும். அவரது அமைச்சுக்களைப் பகிர்ந்து கொண்டவர்கள் அந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக விலகவேண்டும்” இவ்வாறு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வழங்கியது.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தம்மை பதவியில் இருந்து நீக்கியது தவறு என்று உத்தரவிடக் கோரி, முன்னாள் மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, ஜானக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணைகள் முடிந்து, கடந்த 11ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படும் என்று திகதியிடப்பட்டிருந்தது.

எனினும், அன்றைய நாள் நீதியரசர்களில் ஒருவர் விடுப்பிலிருந்தமையால், தீர்ப்பு, கடந்த 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று தீர்ப்புக்காக எடுக்கப்பட்ட போது இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பினை அடுத்து ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த டெனீஸ்வரன்,
“எனது முயற்சியானது அநீதிக்கெதிரானது.முதலமைச்சர் தான்தோன்றித்தனமாக எடுத்த இந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் படி எனது மக்கள் சேவையை தொடர மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் இன மத பேதங்களை மறந்து சேவை செய்தவன் நான்.இதனை சகலரும் அறிவர். எதிர்வரும் 9 ஆம் திகதி ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது கட்டளை ஒன்றை பிறப்பிக்கும்.

அதாவது என்னை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதே. அத்துடன் எனது அமைச்சினை தற்போது பிடுங்கி கூறு கூறுகளாக வைத்திருக்கின்ற முதலமைச்சர், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் உள்ளிட்டோர் பதவி விலகுவது நல்லது.

எனக்கு இந்த நல்லாட்சியில் நீதி கிடைத்துள்ளதை இட்டு சந்தோசம் அடைகின்றேன்” எனறார்.

இது தவிர ஊடகவியலாளரின் மற்றுமொரு கேள்வியான அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிப்பீர்களா? என கேட்ட போது,

“பதவியேற்ற பின்னர் அதனை துறப்பதனைத் தவிர வேறு என்ன செய்வது? காரணம் இந்த முயற்சி முதலமைச்சரின் தவறை சுட்டிக்காட்டவே நான் வழக்கைத் தொடர்ந்தேன். இது மாத்திரமன்றி பழைய அமைச்சானது எனக்கு கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

என்னை நீக்கியவர்களுக்கு எனது அறிவுரையாக இன்னுமொரு புதிய அமைச்சை உருவாக்கி என்னை தவிர்த்து நியமித்த புதியவர்களை நியமித்துவிட்டு எனது பழைய அமைச்சினை தாருங்கள். மக்களுக்கு என்னாலான நிறைய சேவைகளை செய்ய வேண்டி உள்ளன” என்றும் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts