வடக்கு ஆளுநர் நியமனத்தை வரவேற்றுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தற்போது நியமனம் பெற்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களை நியாயப்படுத்தி வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டுவந்தவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளவை வருமாறு:-
வடக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த இராணுவ அதிகாரியான ஜி.ஏ.சந்திரசிறியை மாற்றுமாறு நாம் முன்னைய அரசிடம் பலதடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் எமது கோரிக்கை கருத்தில்கொள்ளப்படவில்லை.
தற்போது புதிய ஆட்சியில் சிவில் நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வரவேற்கத்தக்கது. எனினும் தற்போது நியமனம் பெற்றுள்ள எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலாளராகக் கடமையாற்றியவர்.
இதன்போது இலங்கையில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் குறித்தும், போர்க்குற்றங்கள் குறித்தும் தவறான பரப்புரைகளையே செய்தார். எது எப்படியாயினும் புதிய அரசாங்கத்தின் கீழ் அவர் நியமனம் பெற்றுள்ளார். இதனடிப்படையில் அவரது செயற்பாடுகள் குறித்து பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.- என்றார்.