தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து தம்மை இலங்கையர்களாகக் கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும், வடக்கு மாகாணத்துக்கு தனியாக பொலிஸ் அதிகாரத்தைக் கோரக் கூடாது. இவ்வாறு தெரிவித்துள்ளார் காணமற்போனார் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மனித உரிமை பணியாளர் அவ்டாஸ் கௌஷல்.
இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார் கொஷல். அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:-
இந்தியா இலங்கையுடன் பேச்சு நடத்தலாம், ஆலோசனை வழங்கலாம், ஆனால் அந்த நாடு எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இந்தியா உத்தரவிட முடியாது.
இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றையவர்களின் இறைமையை மதித்துச் செயற்பட வேண்டும். இந்தியப் பிரிவினைவாதிகளுடன் இலங்கை பேச்சு நடத்தினால் இந்தியாவின் உணர்வுகள் எவ்வாறிருக்கும்?
நாங்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றக்கூடாது அதாவது பெரியண்ணண் மாதிரி செயற்பட்டு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடாது.
எமது நிலைப்பாட்டையே வலியுறுத்த வேண்டும். இலங்கையில் 13 ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டவேண்டும். தமிழர்கள் தாங்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதை மறந்து, தம்மை இலங்கையர்களாகக் கருதி அந்த நாட்டின் அரசமைப்பு, சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும், அவர்கள் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் அதிகாரத்தை கோரக் கூடாது – என்றுள்ளார்.