பட்டப்படிப்பை நிறைவு செய்த தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு பேராட்டம் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்த நிலையில், வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர்.
இந்த நிலையில், தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டப்படிப்பை நிறைவு செய்த தமக்கு வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி, நூற்றிற்கும் அதிகமான பட்டதாரிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பல்வேறு வாக்குறுதிகளை கேட்டு ஏமார்ந்து போயுள்ளதாகவும் இதுவே தமது இறுதி போராட்டம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டுமானால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எழுத்துமூலம் பதில் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
