Ad Widget

வடக்கில் மஹிந்தவுக்கு இம்முறை அமோக ஆதரவு கிடைக்கும் என்கிறார் அமைச்சர் பீரிஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித்தரும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

gl peris

கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் தமிழ் ஊடகங்களில் ஆசிரியர்களுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வரவு – செலவுத் திட்டத்தில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில், தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் இன்னுமொரு தடவை அவரில் நம்பிக்கை கொள்வது என எழுப்பப்பட்ட வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், வெறுமனே வெற்று வார்த்தை ஜாலங்களில் சொல்லிவிட்டு போவதை வைத்தன்றி உண்மையில் நிஜத்திலே என்னென்ன விடயங்களை ஒருவர் செய்துள்ளார் என்பதை வைத்தே ஒருவரது நம்பகத் தன்மையை அளவிடமுடியும்.

அந்தவகையில் ஜனாதிபதி வடக்கு மக்களுக்காக நிறையவே செயலில் செய்து காண்பித்துள்ளார். அதனை உணர்ந்து மக்கள் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்தவுக்கு கணிசமான அளவு முன்னெப்போதுமில்லாத வகையில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

ஜனாதிபதி மஹிந்த நினைத்திருந்தால் பெரும் வளங்களை வடக்கிற்கென ஒதுக்காது நாட்டின் வேறுபகுதிக்கு ஒதுக்கியிருக்க முடியும். ஆனால், தனக்கு கடந்த காலங்களில் மக்கள் பெருமளவு வாக்களிக்கவில்லை என்பதை அறிந்தும் கூட மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார். இவற்றைப் பார்க்கும் மக்கள் இம்முறை அவருக்கு நிச்சயம் வாக்களிப்பர் என்றார்.

மைத்திரிபால சிறிசேனவின் கூட்டணியானது முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், ஒன்றுக்கொன்று விரோதமான கொள்கைகளையுடைய கட்சிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு வாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிபாலவால் முடியும் எனவும் கேள்வியெழுப்பினார்.

அதேவேளை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையானது சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பானது. அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கதவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக இன்னும் திறந்தே உள்ளது. பேச்சு மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுடியும். குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தமிழ் மக்களுக்கு எதிரானவர் அல்லர்.

அப்படி அவர் எதிரானவராக இருந்திருந்தால், தமிழ் மக்களுக்கென வளங்களை ஒதுக்கியிருக்கமாட்டார் அல்லவா? மாற்றம் வேண்டும் என்பதற்காக வெறுமனே மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. ஒரு விடயத்தை நன்கு அறிந்து, ஆராய்ந்தப் பின்னர்தான் அதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

எனவே, வடக்கு மாகாணசபை மத்திய அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலம்தான் அவற்றை நிறைவேற்ற முடியும் என்று அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts