Ad Widget

வடக்கில் மக்களின் எஞ்சிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை – மாவை

வலிகாமம் வடக்கிலுள்ள பொதுமக்களின் எஞ்சிய காணிகள் விடுவிப்பது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு, மீள்குடியேற்றம் தொடர்பான குழுவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்டச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றது. அந்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே மாவை இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

‘அரசாங்கம் 1,100 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளது. அவற்றில் பல காணிகளில் இராணுவத்தினர் தடைகளை போட்டுள்ளனர். அவற்றை முழுமையாக அகற்றி மக்களுக்கு வழங்கவேண்டும். அது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. அத்துடன், மிகுதி காணிகள் விடுவிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மீளக்குடியேறிய மக்களுக்கு தேவையான தற்காலிக கொட்டகைகள் அமைத்தல், கிணறுகள், மலசலகூடங்கள் அமைத்தல் மற்றும் தூர்வார்தல், காணிகளை துப்பரவு செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் நாடப்பட்டது. கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமும் இது பற்றி கூறப்பட்டது.

சொந்த இடங்களில் இல்லாமல் இடம்பெயர்ந்திருந்த மக்களுக்கு உதவிகள் வழங்கவேண்டும். இடம்பெயர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல அவர்களின் பிள்ளைகள் தற்போது திருமணம் ஆகியிருந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவிகள் வழங்கவேண்டும்’ என்றார்.

Related Posts