Ad Widget

வடக்கில் பெரும்பான்மையினருக்கு நியமனங்கள் வழங்கப்பட கூடாது: சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் புதிதாக பெரும்பான்மையினருக்கு நியமனங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் துறை ரீதியான முன்னேற்றம், மீளாய்வின் போது விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டன.

இதன்போது அத்திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து விலை மதிப்பீட்டுத் திணைக்களம் உரிய முறையில் சிறப்பாகச செயற்படுவதற்கு விசேட அமைச்சரவை அனுமதியைப் பெற்று ஆளணிகளை உள்வாங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

மேலும் ஆளணிகளை உள்வாங்குகின்ற போது அந்த ஆளணி குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென சிவாஜிலிங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதாவது யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணம் மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்திலும் புதிதாக பெரும்பான்மையினருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆகையால் எல்லா இடங்களிலும், தொழில்களிலும் பெரும்பான்மையினர் ஆதிக்கம் பெருகி வருகின்றமை தடுக்கப்பட்டு, தமிழர்களை உள்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts