Ad Widget

வடக்கில் பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன: மாவை

வடக்கில் படையினரால் மட்டுமல்ல, பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் நிலங்களை அபகரிப்பதை கண்டித்து, செவ்வாய்கிழமை முல்லைத்தீவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மகாவலி திட்டம் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டு இருந்து காமினி திஸநாயக்க அமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் அதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பிரச்சனை இன்று நேற்று ஆரம்பித்த விடயம் அல்ல அமைச்சர் காமினி திஸநாயக்காவின் திட்டப்படி நாற்பதாயிரம் சிங்கள குடும்பங்களை முல்லைத்தீவில் குடியேற்றுவதுதான் அந்த ஆவணம் எங்களிடம் இருக்கின்றது.

ஒரு இலட்சம் ரூபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கும் திட்டம் அந்த நாட்களில் எங்கள் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள் பேச்சுக்களினால் அந்த நாட்களில் மூவாயிரம் குடும்பங்களுடன் அது நிறுத்தப்பட்டுள்ளது. அல்லது இந்த பிரதேசம் முழுக்க சிங்கள தேசமாக மாறி இருக்கும் .

இப்போது ஆறாயிரம் சிங்கள மக்கள் குடியேறியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இதுபற்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். இந்த விடயம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் சம்மந்தனும் நானும் திட்டவட்டமாக சொன்னோம்.

நீர்பாசனத்திற்காக நீரினை வழங்குவது பிரச்சனை இல்லை அத்துடன், தென்னிலங்கை மக்களை நீங்கள் குடியேற்றக்கூடாது என வாதாடி இருக்கின்றோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்னர் மயிலிட்டியில் ஜனாதிபதிக்கு முன்னாள் மகாவலியினை பற்றி நான் பேசினேன். நேற்றும் ஜனாதிபதி செயலகத்தில் நாங்கள் பேசினோம். நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றீர்கள் என்று பேசினோம். அவர் உடனடியாக மகாவலி சபை தலைவருடம் தொலைபேசியில் பேசினார்.

எங்களிடம் சொல்லி இருக்கின்றார் தான் நேரடியாகவே வந்து மகாவலி அபிவிருத்தி தலைவர்கள் சொல்லுவது சரியா அல்லது கூட்டமைப்பு நாங்கள் சொல்லுவது சரியா என்று பார்ப்பேன் அப்படி தவறுகள் இடம்பெற்று வெளியில் இருந்து குடியேற்றப்படுபவர்களை நான் தடுத்து நிறுத்துவேன் என்று நேற்றும் வாக்குறுதி தந்துள்ளார் அவர் இங்க வந்து பார்த்தால் பார்க்கட்டும்.

இன்று வடக்கில் படையினரால் மட்டுமல்ல பல அமைப்புக்களினால் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது அமைப்புக்கள் வந்து தங்களுக்கு சொந்தமானது என்று அறிக்கை விடுகின்றார்கள்“ என தெரிவித்துள்ளார்.

Related Posts