Ad Widget

வடக்கில் சிங்கள மக்களை குடியமர்த்திவிட்டு மாகாணசபை தேர்தலை நடத்துங்கள் – பொதுபல சேனா

Pothupala senaவட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்குத் தேர்தல் தேவையில்லை. அதனை நடத்துவதற்கு பொதுபல சேனா ஒருபோதும் அனுமதிக்காது. முதலில் அங்கு பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்கள மக்களை பதிவு செய்து குடியமர்த்த வேண்டும்.

இந்நிலையில் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுப் பற்று இருந்தால் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏனைய 8 மாகாண சபைகளிலும் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் பதவியை இராஜினாமா செய்து மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.

இதேவேளை, வடக்குத் தேர்தல் இடம்பெற்றால் அது தமிழீழத்திற்கு வழி வகுக்கும். இரண்டாவது பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார். வட மாகாண சபைத் தேர்தலை நிறுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபல சேனா அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts