Ad Widget

வடக்கில் கொல்லப்பட்ட, காணாமல் போன ஊடகவியலாளர்கள் குறித்து விசாரிக்கவும்

வடக்கில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு யாழ். ஊடக அமையம், கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
அந்த கடிதத்தின் முழு விபரம் வருமாறு,

மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பிலான பக்கச்சார்பற்ற விசாரணை

2000ஆம் ஆண்டின் இறுதியில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் அரங்கேறத் தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை, தொடர்ந்து இருபது ஆண்டுகளில் வட-கிழக்கினில் பலர் கொல்லப்படவும் காணாமல் போவதற்குமான பாதைகளை திறந்துவிட்டிருந்தது. குறிப்பாக யாழ். குடாநாட்டில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டனர். சிலர் காணாமல் போயிருந்தனர். ஊடக பணியாளர்களும் கொல்லப்பட்டும் காணாமலும் போயிருந்தனர். ஊடக நிறுவனங்கள் பலதடவைகள் தாக்கப்பட்டன.

அதேவேளை, வன்னியில் யுத்தகாலப் பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் அடையாளப்படுத்தல்கள் இன்றி கொல்லப்பட்டனர். அவர்கள் ஊடகவியலாளர்கள் என்பதை அங்கீகரிக்கக்கூட இன்றுவரை மறுக்கப்படுகின்ற கதை தொடர்கின்றது. குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் பற்றி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதுமில்லாதேயுள்ளன.

இத்தகைய சூழலில் சட்டத்துக்கு முரணாக இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் குறிப்பிடும் வகையில் இடம்பெற்றிருக்கவில்லை. இடம்பெற்ற ஆரம்பகட்ட விசாரணைகளுடன் அவை கிடப்பினில் போடப்பட்டும் விட்டன.

ஆனாலும், மாறி மாறிஆட்சிக் கதிரை ஏறிய தரப்புக்கள் பலவும் பெயருக்கு விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுக்களை அமைப்பதும் அவ்வாணைக்குழுவின் விசாரணைகளால் தீர்வு கிடைக்குமென கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்களது சகபாடிகள் வாக்குமூலங்களையும் சாட்சியங்களையும் அளித்திருந்தனர். அவ்விசாரணைக் குழுக்களுக்கும் அவற்றினது அறிக்கைகளுக்கும் என்ன நடந்ததென்பதை நாம் இன்றுவரை அறியமுடியவில்லை.

இந்நிலையில், காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை மீளஆரம்பிக்கவுள்ளதாக தாங்கள் சக ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளீர்கள். அதனை யாழ். ஊடக அமையம் மனப்பூர்வமாக வரவேற்கின்றது. ஆனால் அது, வெறுமனே பெயரளவிலான விசாரணையாகவோ கிடப்பினில் போடப்படுவதற்காகவோ இருக்கக்கூடாதென நாம் வேண்டுகின்றோம்.

பிரகீத் தொடர்பினில் பேசப்படும் வேளை, யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இராமச்சந்திரன் முதல் வன்னியின் இறுதியினில் தகவலற்றுப்போயுள்ள அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் தேவையென நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் தேவையென வலியுறுத்துவதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் ஊடகவியலாளர்களின் கொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய இதே பாதுகாப்பு பொறிமுறைகளை வைத்து நடத்தப்படும் விசாரணைகள் என்றுமே எமக்கு நம்பிக்கை தரப்போவதில்லை. ஆதலால் பக்கச்சார்பற்ற சர்வதேச ஊடக அமைப்புக்களின் மேற்பார்வையின் கீழான விசாரணைகளையே நாம் வேண்டி நிற்கின்றோம் என்பதையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

யாழ். ஊடக அமையம்

என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts