Ad Widget

வடக்கில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

வடக்கில் கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட நால்வரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வவுனியா பொலிஸார் அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் கைக்குண்டு 2, கத்திகள் 4, 28 பவுண் தங்க நகைகள், முகத்தை மூடி மறைத்துக் கட்டும் கறுப்பு துணிகள், ஒரு முச்சக்கர வண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு அமைவாக மூன்று மாத கால விளக்கமறியல் அனுமதியை நீதிமன்றத்தினூடாக பெற்றுக்கொண்ட பொலிஸார், சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் கொள்ளையடிக்க பயன்படுத்திய மேலும் இரண்டு வாள்கள், இரண்டு டோர்ச் லைற்றுகள், ஒரு சோடி கையுறை, குறடு போன்ற ஆயுதங்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில், குறித்த சந்தேகநபர்கள் வவுனியா, நெடுங்கேணி, ஒட்டுச்சுட்டான், முல்லைத்தீவு போன்ற காட்டுப்பகுதிகளில் வாள், கத்தி மற்றும் கையுறை போன்றவற்றை மறைத்து வைத்திருந்து கொள்ளையிட்ட பின் அக் காட்டு பிரதேசத்திலேயே மறைத்து வைத்துவிடுவார்கள் என தெரிவித்தனர். அத்தோடு, மக்களை அச்சுறுத்துவதற்காக பெரியளவிலான வாள்களைக் காட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Posts