வடக்கில் காணப்படுகின்ற இராணுவ சின்னங்களை எச்சந்தர்ப்பத்திலும் அகற்ற முடியாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இன்னும் இராணுவ சின்னங்களை காணப்படுவதாகவும் அவற்றை அகற்ற வேண்டுமென கோரி வருகின்றனர்.
இவ்வாறு ஒருசில கருத்துக்களுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது. மேலும் இராணுவ சின்னங்களை அகற்றவேண்டிய அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை.
இந்தவகையில் வடக்கில் சில கடும்போக்கு அரசியல்வாதிகள் தான் தங்களுடைய நலன்களுக்காக இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.
இவர்களது செயற்பாடுகளால் மக்களிடைய நல்லிணக்கம் பாதிக்கப்படுகின்றது. இவ்வாறு மக்களுடைய நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
மேலும் தமிழீழ விடுதலைபுலிகளை மீண்டும் புதுப்பிக்க ஒரு சிலர் நினைப்பார்களாயின் அவ்விடயம் தொடர்பில் சக்திமிக்க தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும்” என ருவான் விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.