Ad Widget

வடக்கில் இதுவரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

வடக்கு மாகாணத்தில் கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மார்ச் முதல் செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் 17 நோயாளர்களும் ஒக்டோபரில் 39 பேரும் நவம்பரில் 27 பேரும் டிசெம்பரில் இன்றுவரை ஒருவர் என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 13 பேரும் யாழ்ப்பாணத்தில் இருந்து எட்டுப் பேரும் மன்னாரில் இருந்து நால்வரும் முல்லைத்தீவில் இருந்து இருவரும் என மொத்தம் 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக அவசியம் ஏற்படும்போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் உள்ள ஆய்வுகூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.

வடமாகாணத்தில் உள்ள ஆய்வுகூடங்களில் ஒக்டோபரில் ஏழாயிரத்து 124 பி.சி.ஆர். பரிசோதனைகளும் நவம்பரில் எட்டாயிரத்து 69 பி.சி.ஆர். பரிசோதனைகளும் கொழும்பு அனுராதபுரம் ஆய்வுகூடத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், வடமாகாணத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மருதங்கேணி வைத்தியசாலை, கோப்பாய் கல்வியற் கல்லூரி மற்றும் கிளிநொச்சி கிருஷ்ணபுரம் மாகாண தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியன இயங்கி வருகின்றன.

இதில், மருதங்கேணி வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் தற்போது 50 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts