Ad Widget

வடக்கின் தேவைகளை ஆராய சந்திரிகா தலைமையில் குழு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைகள் அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளி நொச்சி மாவட்டங்களுக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையிலான குழுவினர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர், ஜனாதிபதி மைத்திரி பாலாவின் ஆலோசகர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்கியிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நீண்டகால நோக்கிலான அபிவிருத்தித் தேவைப்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளனர். இது தொடர்பிலான ஏற்பாடுகள் ஏற்கனவே குறித்த மாவட்டச் செயலகங்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts