வடக்கு மாகாண சிக்கனக்கடன் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டர் கூட்டுறவுக் கல்லூரியினால் பயிற்சிப் பட்டறையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை (14.07.2015) யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சிப் பட்டறையை வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
வடக்கு கூட்டுறவுத்துறையின் அபிவிருத்தியை மேம்படுத்தும் வகையில் நூறு நாள் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு திட்டமாக, கூட்டுறவு இயக்கத்தை வடக்கில் பலப்படுத்துவதற்கான உதவியை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரிடம் கேட்டிருந்தார். இதன் அடிப்படையிலேயே, பிரித்தானியத் தூதரகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டர் கூட்டுறவுக் கல்லூரி நெதர்லாந்து மனிதநேய செயற்பாட்டுக்கான கூட்டுறவு அமைப்புடன் இணைந்து வடக்கு மாகாணக் கூட்டுறவாளர்களின் தொழில் முயற்சியாண்மையை விருத்தி செய்யும் வகையில் பயிற்சிப் பட்டறையை ஆரம்பித்துள்ளது.
முதற்கட்டமாக சிக்கனக்கடன் கூட்டுறவுச் சங்கங்களின் ஒரு தொகுதி அங்கத்தவர்களுக்குப் பயிற்சியை ஆரம்பித்துள்ள மான்செஸ்டர் கூட்டுறவுக் கல்லூரி, பல்வேறு கட்டங்களாக ஒரு வருடத்துக்கு இத்திட்டத்தை வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் முன்னெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
யாழ் நகரின் விடுதி ஒன்றில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் தொடக்க நிகழ்ச்சியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன், வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் மதுமதி வசந்தகுமார், இலங்கை சிக்கனக்கடன் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் பி.ஏ.கிரிவெந்தனியா, மான்செஸ்டர் கூட்டுறவுக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் கலாநிதி லின்டா ஷா, ஸ்டேர்லிங் சிமித், நெதர்லாந்து மனிதநேயச் செயற்பாட்டுக்கான கூட்டுறவு அமைப்பின் திட்டப் பணிப்பாளர் ரஜனி இக்பால் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.