வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்திற்கு வெள்ளிகிழமை வழிபாட்டிற்கு செல்ல, பலாலி பாதுகாப்பு தலைமையகம் அனுமதித்துள்ளது.
ஞான வைரவர் ஆலய வைகாசி விசாக மடை வெள்ளிக்கிழமை ஆகும்.
அதற்கு செல்வதற்கு அனுமதி பெற்று தருமாறு அப் பகுதி மக்களினால் வடமாகாண சபை முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர், மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு ஆலயத்திற்கு செல்ல அனுமதி கோரி கடந்த 25ம் திகதி கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தின் பிரகாரம், வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
ஆலயத்திற்கு சென்று வழிபாடு மேற்கொள்ளவோர் வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு முன்னர் வசாவிளான் மத்திய மகா வித்தியலாயம் முன்பாக சமூகம் தருமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
கடந்த மாதம் 5ம் திகதி குறித்த ஆலயத்திற்கு செல்வதற்கு வசாவிளான் உயர் பாதுக்காப்பு வலய எல்லையில் உள்ள இராணுவ காவலரணில் மக்கள் அனுமதி கோரிய போது இராணுவத்தினர் மறுத்து விட்டனர்.
அதனால் ஞாவைரவருக்கு உடைக்க என கொண்டு சென்று இருந்த தேங்காயினை இராணுவ காவலரண் முன்பாக உடைத்து அங்கேயே கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.