Ad Widget

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது!

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டமாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் தொப்புள் கொடி உறவுகளான இந்திய உறவுகளுக்கும் எமக்கும் பகையுணர்வை ஏற்படுத்தாது எல்லை தாண்டிய மீன்பிடியை தடுத்து நிறுத்தி, எமது வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மீன்பிடித்துறை அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மீனவர்கள், 30 வருட கால யுத்தத்திலும் சுனாமி பேரலையிலும் அனைத்தையும் இழந்து மெல்ல மெல்ல மீளெழுந்துவரும் எமது வாழ்வாதாரத்தை சுரண்டுவதை நிறுத்துமாறும், போராட்ட காலங்களில் எமக்காக தீக்குளித்த உறவுகள் அவ்வாறான எமது உறவுகளை சீர்குலைக்காது, இரு நாட்டு அரசுகளும் பேசி எல்லை தாண்டிய மீன்பிடியை நிறுத்தி உதவ வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

அதேவேளை இந்தியாவில் உள்ள மீன்பிடி அமைப்புக்கள் அவர்களுடைய இழுவைப்படகு உரிமையாளர்களிடம் கூறி எமது எல்லைக்குள் வந்து எமது வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

Related Posts