Ad Widget

ராணுவத்தினரின் பேருந்துகளில் போதைப் பொருட்கள் கடத்தல்: துவாரகேஸ்வரன்

யாழ் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரின் பேருந்துகளில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக ஜக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மீது கடந்த இரு வாரங்களாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கையால் பயணிகள் பலத்த அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

போதைப் பொருள் கடத்தலை காரணம் காட்டியே இச் சோதனை நடவடிக்கைகள் பல இடங்களில் நடத்தப்படுகின்றது. வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் போதைப் பொருட்களை கடத்திச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் சட்ட ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபருக்கு நேரடியாகவும், எழுத்து மூலம் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தொடர்ந்து பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போது, கடந்த இரு வாரங்களாக போதைப் பொருள் கடத்தல் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பயணிகள் பேருந்துகள் வீதி வீதியாக மறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாமல், சட்டவிரோதமான முறையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மூலமே இக் கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இது தவிர இராணுவத்தினரும் பேருந்து சேவைகளில் ஈடுபடுகின்றார்கள். இராணுவதினருடைய பேருந்துகளில்தான் அதிகளவிலான போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகின்றன. அது பொலிஸாருக்கும் தெரியும்.

ஆனால் இராணுவத்தினருடைய பேருந்தை பொலிஸார் மறிப்பதும் இல்லை, சோதனை செய்வதும் இல்லை.குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இனங்கண்டு கொண்ட பின்னரும், அவர்களை கைது செய்யாமல் அப்பாவி பயணிகளை வேண்டுமென்றே அசௌகரியப் படுத்தும் செயற்பாடுகளை பொலிஸார் நிறுத்த வேண்டும்.

இவ்விடயங்களில் உடனடியாக சட்ட ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் தலையிட்டு பாதுகாப்பான பயணிகள் சேவையினை நடத்த உதவ வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts