இறுதி யுத்தம் எங்கே நடைபெற்றதோ அங்கேயே நினைவுத் தூபி அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும் நினைவு கூறுவதற்காகவும், மத அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக அந்த நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தேன்.
அதனை இந்த அரசு ஏற்றுக் கொண்டிருந்தது. எனினும் அந்த நினைவுத்தூபி அமைவிடம் தொடர்பில் எமக்கு இணக்கம் இல்லை. மேற்படி நினைவுத்தூபியானது இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியிலேயே அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இருந்தும் அன்று நினைவுத்தூபி அமைத்தல் தொடர்பில் இந்த அரசு ஏற்றுக் கொண்டாலும், இவ்விடயம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமானதொரு ஏற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டுவதுடன்,இவ்விடயம் தொடர்பில் இந்த அரசு உடனடி அவதானத்தை செலுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்“ என தெரிவித்துள்ளார்.