Ad Widget

யுத்தத்தை நிறுத்தாவிடின் தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பர்

யுத்தத்தை அப்போது தான் நிறுத்தாமல்விட்டிருந்தால், இப்போதுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பார்கள் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

muralitharan

‘திவிநெகும’ திணைக்களத்தின் ‘செழிப்பான இல்லம்’ எனும் செயற்றிட்டத்தின் கீழ், போரதீவுப்பற்று பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பயனாளிகள் வீடுகளை திருத்துவதற்கான 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, திக்கோடை கணேச வித்தியாலயத்தில் புதன்கிழமை (10) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது, தமிழ் மக்களுக்காக ஒஸ்லோவுக்குச் சென்று அப்போதிருந்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவ்வாறு பல பேச்சுவார்தைகள் நடத்தியபோதிலும், இறுதியில் எதுவும் நடைபெற்றதாக இல்லை. இந்த நிலையில், நானே உணர்ந்து யுத்தத்தை நிறுத்தினேன்.

நான் அப்போது யுத்தத்தினை நிறுத்தாமல் விட்டிருந்தால் இப்போது இருக்கும் எமது தமிழ் இளைஞர் யுவதிகள், இல்லாமல் போயிருப்பார்கள். இப்போதுள்ள அரசாங்கத்தை பலப்படுத்தி நாங்கள் அனைவரும் நன்மை அடையவேண்டும். இந்த விடயத்தில் எமது தமிழ் மக்கள் மிக கவனமாக சிந்தித்துச் செயற்படவேண்டும்.

இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், ஆளும் கட்சியில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் உருவாக்கிவிடலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 60,000 வாக்குகள் கிடைத்தன. இவை இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளாகும். கடந்த தேர்தல்களில் எதிர்த் தரப்புக்கு எமது மக்கள் வாக்களித்தது போலல்லாமல், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உட்கட்டுமான அபிவிருத்திகளை மேற்கொண்டுவருகின்றோம். அதுபோன்று, இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திவிநெகும திணைக்களத்தின் ஊடாக திவிநெகும திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தினூடாக குறைந்த வட்டி வீதத்தில் கடன் வசதிகள், தொழில் உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது தவிர, இந்த மாவட்ட மக்களின் நலன் கருதி ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ், 24 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நனசல திட்டத்தின் கீழ் 14 பாடசாலைகளும் இதை விட, மஹிந்தோதைய திட்டத்தின கீழ் 5 பாடசாலைகளும் தெரிவுசெய்யப்பட்டு அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. நீர்ப்பாசன வசதி, உரமானியம், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு உட்பட இம்மாவட்ட மக்களின் அனைத்து விடயங்களுக்கும் இந்த அரசு உதவுகின்றது.

கடந்த 5 வருடங்களினுள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினூடாக மாத்திரம் 61 கோடி ரூபாய் நிதி இப்பிரதேச அபிவிருத்திகளுக்காக செலவாகியுள்ளது. இதனை விட மின்சாரம், நீர்ப்பாசனம் போன்றவற்றுக்கு விசேட திட்டத்தினூடாக பல கோடிக்கணக்கான நிதி இப்பிரதேசத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Related Posts