Ad Widget

யாழ்.வல்வெட்டித்துறையில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர்.

23, 24 மற்றும் 26 வயதுடைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. அவை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். 7 கொள்ளைச் சம்பவங்களுடன் மூவருக்கும் தொடர்புள்ளமை சந்தேக நபர்களிடம் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களின் மூலம் கண்டறியப்பட்டது.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்படும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

4 சந்தேக நபர்களிடமிருந்தும் 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள் அகலத் திரை தொலைக்காட்சிப் பெட்டி, மோட்டார் சைக்கிள் ஒன்று, 6 அலைபேசிகள், அப்பிள் ஐபாட் ஒன்று மற்றும் கிட் கார்ட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts