Ad Widget

யாழ்.வரணி மக்களை நோக்கி துப்பாக்கி சூடு: இனந்தெரியா நபரின் அட்டகாசத்தால் பெரும் பதற்றம்- இராணுவம் குவிப்பு

யாழ்.வரணிப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சுட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வரணி மகாவித்தியாலத்திற்கு அண்மையில் இருந்த பொது மக்களை துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்து கலைந்து போகுமாறு மிரட்டியுள்ளார்.

இருப்பினும் காரணத்தை அறியாமல் பொது மக்கள் கலைந்து செல்லாதைத் தொடர்ந்து அவர் பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது தெய்வாதீனமாக உயிர் இழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை.

இதன்பின்னர் அங்கிருந்து கலைந்து ஓடிய பொது மக்கள் குறித்த நபரை மடக்கி பிடித்துள்ளனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி இராணுவத்தினர் குறித்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

குறித்த நபர் யார்? ஏன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்? என உள்ளிட்ட விபரங்கள் எவையும் உடனடியாக கிடைக்கப் பெறவில்லை.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கும் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற பகுதியில் பாரியளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளும் முடக்கி விடப்பட்டுள்ளன.

இச்சம்பவங்களை அடுத்து வரணி முழுவதிலும் கடும் பதற்றமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.

Related Posts