Ad Widget

யாழ். மாவட்ட அனர்த்த தணிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு

யாழ். மாவட்டத்தில் அனர்த்த தணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த வருடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக 57 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

யாழ் மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அவை தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியில் 24 பிரிவாக அனர்த்த தணிப்பு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இதனடிப்படையில், யாழ். பிரதேச செயலாளர் பிரிவில் 4 செயற்றிட்டங்களும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 3 செயற்றிட்டங்களும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 8 செயற்றிட்டங்களும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 4 செயற்றிட்டங்களும் பருத்தித்துறை, வேலணை, நல்லூர், கரடிவெட்டி, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்கும் தலா ஒரு செயற்றிட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வெள்ள அனர்த்த தணிப்பை மேற்கொள்ளும் நோக்கில் குளங்கள் புனரமைப்பு, வடிகால், அணைக்கட்டுக்கள், குளங்கள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ தணிப்பு நடவடிக்கைகளுக்கென 120 மில்லியன் ரூபாய் நிதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் இரண்டு வருட செயற்றிட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. 2014 ஆம் ஆண்டுக்கான நடவடிக்கைகள் அனைத்தும், இந்த வருட இறுதிக்குள் நிறைவடைய வேண்டும் என்பதனால் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts