Ad Widget

யாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவு!

யாழ். மாநகர சபை மேயரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் றெமீடியஸும் மேயர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பு இடம் பெற்றது.

இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா இல்லை பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா என்று வாக்கெடுப்பு நடத்தியபோது 25 பேர் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில் 19 பேர் பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

மேயருக்கான இரகசிய வாக்கெடுப்பில், தமிழரசுக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றதோடு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட றெமிடீயஸும் தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.

விதிகளின் படி குறைந்த வாக்குகளைப் பெற்றவர் நீக்கப்பட்டு, அதிக வாக்குகளைப் பெற்ற இருவருக்கிடையே வாக்கெடுப்பு நடைபெறவேண்டுமென்ற நிலையில், மணிவண்ணனும் றெமீடியஸும் தலா 13 வாக்குகளைப் பெற்ற நிலையில், குலுக்கல் முறையில் மணிவண்ணன் நீக்கப்பட்டிருந்தார்.

ஆர்னோல்டுக்கும் றெமீடியஸூக்கும் நடைபெற இருந்த போட்டியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ) வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்தது.

இந்நிலையில் ஆர்னோல்டுக்கும் றெமீடியஸூக்கும் இடையில் வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் றெமீடியஸ் வாபஸ் பெற கூட்டமைப்பு ஆர்னோலட் மேயரானார்!

முன்னதாக ஈபிடிபியிருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொலைபேசி உரையாடல்கள்  இது தொடர்பில் நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதில்  தமிழரசு கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ரெலோ முக்கியஸ்தர்கள் ஈடுபட்டிருந்தனர்

Related Posts