Ad Widget

யாழ். மாநகர சபை முதல்வர் பதவிக்கு மீண்டும் ஆர்னோல்ட் வேட்பாளர்!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் பதவிக்கு மீண்டும் இம்மானுவல் ஆர்னோல்டை வேட்பாளராக நிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இருப்பினும், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு யாரை பிரேரிப்பது என்பது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் உறுதிசெய்யப்படவில்லை.

யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை மேயர் மற்றும் தவிசாளர் தெரிவுகள் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

இதுதொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் கடந்த 26ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, யாழ். மாநகர சபையின் விவகாரம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாரை நிறுத்த வேண்டும் என்பதை ஏனைய கட்சிகள் தீர்மானிக்க முடியாது எனவும் ஆர்னோல்டை மீள களமிறக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தமக்குத் தரவேண்டும் என ரெலோ கோரியுள்ள நிலையில், இதுதொடர்பாக நாளை முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts