Ad Widget

யாழ் மாநகர சபையின் பாதீடு தொடர்பில் பார்த்தீபன் அவர்கள் கூறிய பல அதிர்ச்சி தகவல்கள்!!

யாழ் மாநகரசபையின் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டவேளையில் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அவர்களால் ஆற்றப்பட்ட உரையின் முழு வடிவம்..

கௌரவ முதல்வர் அவர்களே, ஆணையாளர், செயலாளர், கௌவர உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். கௌரவ முதல்வரின் அனுமதியுடன் நீங்கள் சமர்ப்பித்த பாதீட்டின் பிரகாரம் எனது வரவு செலவுத்திட்ட உரையினை நிகழ்த்துகின்றேன்.

யாழ்.மாநகர சபையின் 2020 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இச் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இத் தருணத்தில் அதனை விவாதிப்பதற்கும் அங்கீகரிப்பதற்கும் முன்னர் கடந்த ஆண்டு இச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு கௌரவ சபையினால் அங்கீகரிக் கப்பட்ட 2019 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் வினைத்திறனான செயற்பாட்டினைக் கொண்டிருந்ததா என்பதனையும் திரும்பி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

அந்தவகையில் . கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு இச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அன்று சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டில்

1.சபையின் சுயவருமானம் 911 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது அதில் 355 மில்லியன் ரூபா உறுதி செய்ய முடியாத நிச்சயமற்ற வருமானமாக காணப்பட்டது.

2.சபை உறுப்பினர்களின் நல நோன்புக்கு 47.37 மில்லியன் ரூபா காணப்பட்டது.

3.மக்களின் சமூகநலன் மேம்பாட்டுக்கு குறைந்த அளவு தொகை ஒதுக்கப்பட்டது.

4.ஒரு குறிப்பிடத்தக்க புதிய பொறிமுறை செயற்றிட்டம் எதுவும் இல்லாமை ஆகிய 4 காரணங்களை காட்டி நாங்கள் எதிர்திருந்தோம்.

பின்னர் 12.12.2019 அன்றைய பாதீட்டு விவாதத்தில் இக் குறைபாடுகள் இயலுமானவரை குறைக்கப்பட்டதுடன் எம்மால் பிரேரிக்கப்பட்ட திண்மக்கழிவகற்றல் பொறிமுறைக்கு என 30 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவ் வரவு செலவுத்திட்டம் செயல் வடிவம் பெற ஆதரவினை வழங்கியிந்தோம்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஒரு மிகைப்படுத்தப்பட்ட உறுதி செய்யமுடியாதா நிச்சயமற்ற வருமானங்களுடன் இச் சபையில் 2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்பிக்கப்பட்ட உடனேயே ஒரு சில கௌரவ உறுப்பினர்கள் இது சிறந்த சாத்தியமான பாதீடு என்று உரை நிகழ்த்தியதோடு அதனை முன்மொழிந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலில் 911 மில்லியன் ரூபாவாக இருந்த சுயவருமானத்தில் 562 மில்லியன் ரூபாவே நிச்சயமான வருமானம் என்று சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் அது குறைக்கப்பட்டது. அதாவது 911 மில்லியன் ரூபாவில் 62 சதவீதமான வருமானமே நிச்சயமான சபைக்குரிய வருமானம் .

அதன் அடிப்படையில் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் யாழ்.மாநகர சபையின் சுய வருமானம் 562.62 மில்லியன் ரூபாகக் காட்டப்பட்டது. ஆனால் இன்று வரை சபை அறவிட்ட அல்லது சபைக்கு கிடைத்த வருமானம் 370.95 மில்லியன் ரூபாவாகும். அதாவது எதிர்பார்த்த வருமானத்தில் 65 சதவீத வருமானத்தினையே பெற முடிந்தது.

அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் திருத்தப்படாமல் முதலில் குறிப்பிடப்பட்டது போல் 911 மில்லியன் ரூபாவே சபையின் சுயவருமானமாக காட்டப்பட்டிருந்தால் அதில் எத்தனை சதவீதத்தினை வருமானமாகப் பெற்றிப்போம் என்பதனை உங்களுடைய சிந்தனைகே விட்டு விடுகின்றேன்.

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் பல பெறவேண்டிய வருமானங்களை பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. உதாரணமாக

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் விளம்பரங்கள் மூலமான வருமானம் 60 இலட்சம் ரூபா என்று கூறிப்பிடப்பட்டிருந்த போதும் சபைக்கு இன்று வரை 29 இலட்சம் ரூபாவே வருமானமாக கிடைத்திருக்கின்றது. 23 இலட்சம் ரூபாவுக்கு மேல் கட்டணம் செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து விளம்பர கட்டணம் பல மாதங்களால அறவிடப்படவில்லை என்று கடந்த இச் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் மிகப் பிரபலமான அதிக இலாபம் உழைக்கின்ற நிறுவனங்களிடம் இருந்து அவர்களின் விளம்பர பலகைக்கான கட்டணங்கள் இன்னமும் அறவிடவே தொடங்கவில்லை. இவ்வாறான பொறுப்பற்ற அசமந்த போக்கினால் தான் வருமான இழப்புக்கள் ஏற்பட்டன.

கடை உரிமங்கள் என்ற பெயரில் 130 மில்லியன் ரூபா வரவு செலவுத்திட்டத்தில் தொடர்ச்சியாக ஒரு வருமானமாக காட்டப்பட்டு வருகின்றது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் அது பெறப்பட்டதாக எந்த ஒரு பதிவும் இல்லை. இந் நிலையில் இந்த முறை வரவு செலவுத்திட்டத்திலும் அது தொடர்ச்சியாக வருகின்றது. ஆனால் அதை அறவிடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

கடந்த முறை வரவு செலவுத்திட்டத்திற்கு நாம் ஆதரவு வழங்கியதற்கு முக்கிய காரணம் வருமானத்திற்கு ஏற்றவாறான மக்களுக்கான நலத்திட்டங்கள் பல காணப்பட்டமையே ஆகும். ஆனால் வரவு செலவுத்திட்டத்தில் வெறும் எழுத்துங்காலாலும் வாசிக்கும் போது மனத்திற்கு திருப்தி தரும்வகையிலும் காணப்பட்ட இவ் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் வீதிகளின் மறு சீரமைப்பிற்காக 49.9 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது ஆனால் இன்று வரை அதில் 20.2 மில்லியன் ரூபாவே செலவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் வடிகால்களின் மறு சீரமைப்பிற்காக 49.9 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது ஆனால் மிக வேதனையான விடயம் இன்று வரை அதில் 31,200 ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. ஆக யாழ்.மாநகரத்தில் வாய்கால் தேவையே இல்லையா?

தெரு வெளிச்சத்திற்கு 40 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த போதும் 302,613 ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் நவீனசந்தை திருத்தம் அதாவது கஸ்தூரியார் வீதியில் காணப்படுகின்ற போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கின்ற சேதமடைந்து காணப்படுகின்ற இரண்டு மேம்பாலங்க ளையும் உடைத்து புனரமைப்பு செய்வதற்காகவும் நவீன சந்தையில் காணப்படுகின்ற கடைத்தொகுதிகளின் மின்சார இணைப்பினை மேம்படுத்தி எல்லா கடைத்தொகுதிகளின் மின்மாணிகளையும் ஒரே இடத்தில் பொருத்தவும் மற்றும் அலுவலக திருத்தம் என்பதற்காகவும் மட்டும் 2 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது அதில் 3,253,513 செலவு செய்யப்பட்டுள்ள போதிலும் நான் அறிந்த வகையில் நவீன சந்தையில் எந்த திருத்தமும் இன்று வரை செய்யப்படவில்லை.

கடந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு முக்கிய காரணியாக இருந்தது யாழ்.மாநகர சபையின் திண்மக்களிவற்றலை வினைத்திறனாக மாற்றுவதற்கு கண்காணிப்பு கமராக்களுடன் பொறி முறையை உருவாக்கி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்தமையே ஆகும். ஆனால் வரவு செலவுத்திட்டத்தில் 3 கோடிரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்ட அப்பொறிமுறைக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் முடிவிற்கு வந்து விட்டது. ஏதோ கடந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எமது ஆதரவினை பெறும் நோக்குடன் மட்டும் வெறும் எழுத்துக்களில் ஒதுக்கப்பட்டதாகவே இதனைப் பார்க்கவேண்டியுள்ளது.

ஒரு உள்ளுராட்சி சபையின் பிரதான பொறுப்பு திண்மக்கழிவகற்றலே அதற்கு கூட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியினைக்கூட செலவு செய்யாத நிலையில் கடந்த வரவு செலவுத்திட்டம் செயல்திறன் அற்று காணப்பட்டது ஏமாற்றம் அளிக்கின்றது.

ஒருவர் மரணம் அடைந்தால் அவரது இறுதிக்கிரிகைகளை ஆற்றுவற்கும் அவரின் உடலை மக்கள் அஞ்சலிக்கு வகைக்கும் வகையில் கோம்பபைய மணல் மாயனத்தைப் புனரமைத்து மலர் சாலை அமைப்பதற்கு என 3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடந்ததாக தெரியவில்லை

இதை விட சுடுகாடு இடுகாடு பராமரிப்பிற்கு என 5 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது ஆனால் அதில் ஒரு சதம் கூட இன்னமும் செலவு செய்யப்படவில்லை என்றால் அதன் அர்த்தம் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குள் காணப்படுகின்ற எல்லா சுடுகாடும் இடுகாடும் சிறந்த முறையில் பராமரிப்பில் இருக்கின்றது என்பதா?

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒரு மினிடோசர், 3 கலிபவுசர், 1 ஏறியல் பிளட்போம், 1 புல்லுவெட்டு இயந்திரம் ஆகியவற்றினை கொள்வனவு செய்வதற்கென 52மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 123,338 ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டது. எந்த ஒரு வாகனமும் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்படவில்லை. ஆனால் ஒரு நன்கொடை நிறுவனம் 3 கலிபவுசர்களை அன்பளிப்பாக வழங்கியது.

ஒதுக்கப்பட்ட 52 மில்லியன் ரூபாவில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 கலிபவுசர்களை விடுத்து கடந்த வரவு செலவுத்திட்டத்தில் கூறியவாறு ஏறியல் பிளட்போம் வாகனத்தை மட்டும் வாங்கி மிகுதி பணத்தினை மக்களின் அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான செயற்பாடுகள் எதுவும் நடைபெற வில்லை.

தலை குனிந்து என்னைப் பார் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கின்றேன் என்றுரைக்கின்ற புத்தகங்களை நூலகங்களுக்கு கொள்வனவு செய்வதற்கு என கடந்த வரவு செலவுத்திட்டத்தில் 15லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் 441,873 ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

இதை விட கர்பணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்குதல் என்று 20 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 94,163 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட தொகையில் வெறும் 4.7 வீதம் தான் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பல விடயங்கள் 2019 வரவு செலவுத்திட்டத்தில் வெறும் எழுத்துக்காக தொகைகளாக நிதி ஒதுக்கீடுகளாக இருக்கின்றதேயோலிய அதற்குரிய எந்த நிதியும் விடுவிக்கப்படவும் இல்லை செலவு செய்யப்படவும் இல்லை செயற்றிட்டங்கள் எதையும் நடைமுறைப்ப டுத்தவும்வில்லை.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் என்று 81,000,000 ரூபா அபிவிருத்தி திட்டங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது. ஓவ்வொரு வட்டார உறுப்பினரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டார நிதியினை சிறந்த முறையில் வினைத்திறனாக மிச்சம் மீதி வைக்காமல் பயன்படுத்தினர். இதுவே கடந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளவற்றில் செயல்முறையில் 100 வீதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு காரணம் ஒவ்வொரு வட்டார உறுப்பினர்களின் அழுத்தம். ஆனால் வட்டார நிதி ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக யாழ்.மாநகர மக்களின் நலநோன்புக்காக பொதுவான பல்வேறு செயற்றிட்டங்கள் புனரமைப்புகள் மேம்படுத்தல்கள் திருத்தங்கள், மக்களுக்குரிய சேவைகளை வழங்குவதற்கான வாகனக்கொள்வனவுகள் என மொத்தமாக 129,490,000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது ஆனால் அதில் 30.9.2019 வரை 6,273,986 ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டது. அதாவது இவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 4.85 வீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டது.

மேலதிக நேரக் கொடுப்பனவுக்கென கடந்த வருடம் 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது அதில் இதுவரை 15,041,422 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் 75 வீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. பல ஊளியர்களுக்கு குறிப்பாக தூய்மைப்படுத்தல் பணியாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு முடிவுற்றது இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டும் உள்ளது. ஒரு வரவு செலவுத்திட்டத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவினை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு அமைவாக அதனை கட்டுப்படுத்துகின்ற செலவழிப்பதற்கு செயல்முறைப்படுத்துகின்ற நீங்கள் வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை மட்டும் அவ் நிதி ஒதுக்கீடுகளுக்கு ஏற்றவகையில் செயல் படுத்த முன்வராமைக்கான காரணம் என்ன?

சபையின் வருமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட 2019 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான தங்களுடைய அறிக்கையில் வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை முன்வைக்காமல் கம்பரலியா திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்களைத் கடந்த வருட முன்னேற்ற அறிக்கையாக தெவிரிவிப்பது எவ் வகையில் நியாயபாடானது. கடந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் முன்னேற்றமாக கம்பரலியா செய்ற்றிடங்கள் எவ்வாறு அமையும்?

இந்நிலையில்தான் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சோலை வரி வருமானமாக இருந்த 46,423,329 ரூபா இம் முறை 122,934,500 ரூபாவாக அதாவது 3மடங்கு அதிகமாக காட்டப்பட்டுள்ளது.

கடந்த முறை சபையின் சுயவருமானமான 562.62 மில்லியன் ரூபாவில் ஒக்டோபர் மாதம் வரை சபைக்கு கிடைத்த வருமானம் 370.95 மில்லியன் ரூபாவாக இருக்கும் நிலையிலும் செலவுகளை ஈடுசெய்வதற்காக சபையின் நிலையான வைப்புக்களை முடிவுறுத்த வேண்டிய நிலையிலும் 2020 வரவு செலவுத்திட்டத்தில் கடந்த வருடமும் அறிவிடப்படாத அல்லது அறிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத 130 மில்லியன் ரூபா கடை உரிமை வருமானம் மற்றும் 3 மடங்காக அதிகரிக்கப்பட்ட சோலை வரி வருமானம் அடங்கலாக சபையின் சுய வருமானம் 627.31 மில்லியன் ரூபாவாக காட்டப்பட்டுள்ளது .

அத்துடன் கடந்த வருடம் ஒதுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட கடல் கடந்த பிரயாணச் செலவுக்கு இம் முறை வரவு செலவுத்திட்டத்தில் 1 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத்திட்டத்தினை சபையின் சுய வருமானத்திற்கு ஏற்ற வகையில் மக்களுக்கான நலநோன்புத் திட்டங்கள் பல இருக்கின்றன என்பதன் அடிப்படையிலும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டால் மாநகரத்தில் ஒரு ஏற்றமிகு முன்னேற்றம் காணப்படும் என்பதற்காக அதில் திருத்தங்களை மேற்கொண்டு ஆதரித்து அதனை நடைமுறைப்ப டுத்துவதற்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கி உங்களோடு இறுகக்கை கோர்த்து பயணித்தோம் ஆனால் மக்களுக்கு தீமைதரும் என்பதன் அடிப்படையில் மக்களுடையதும் பெரும்பான்மையான கௌரவ உறுப்பினர்களினதும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிமாட் லாம்போல் என்பதன் அடிப்படையில் தொலைத் தொடர்புக் கோபுரங்களை நிறுவியே தீரவேண்டும் என்பதில் காட்டிய கரிசனை உறுதிப்பாடு மக்களுக்கு நன்மை அளிக்கின்ற பல செயற்றிட்டங்கள் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் இருந்தும் அதனை நடைமுறைப்படுத்தப்படுத்துவதில் காட்டவில்லை என்பது தெளிவு.

அதன் அடிப்படையில் சபைக்கு வரவேண்டிய வருமானங்களை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்கோ பாதீட்டில் கூறப்பட்டது போல் நிதிஒதுக்கீடுகளின் பிரகாரம் அதனை நடைமுறைப்படுத்தாத நிலையில் கடந்த கால வரவு செலவுத்திட்டம் மக்களின் ஏற்றமிகு வாழ்வியலுக்கான செயற்றிட்டங்கள் வெறும் எழுத்துக்களாகவே உள்ளன. பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் மக்களுக்கு நன்மைதரும் அவ் செயல் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தாத 2019 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் என்னைப் பொறுத்தவரை அது நன்றாக முடிவைக் கப்பட்ட வெறும் காகிதக் கட்டுத்தான்.

உள்ளுராட்சி திணைக்களம் வரவு செலவுத்திட்டம் தயாரிப்பு தொடர்பாக 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட சுற்றக்கையில் ‘ வருமானம் மற்றும் செலவீனத்தை மதிப்பீடு செய்யும் போது யாதாயினுமொரு விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் தரவுகளைக் கணிப்பிடுகின்ற மரபு ரீதியான முறையிலிருந்து விடுபட்டு உண்மையான வருமானம் மற்றும் செலவினங்களைக் கணிப்பிட வேண்டும் என்பதன் அடிப்படையில் சிறந்த முடிவு அனுபவத்தில் இருந்து தான் வருகின்றது என்பதன் அடிப்படையில் கடந்த வரவு செலவுத்திட்டத்தில் சிறந்த உள்ளடக்கம் இருந்தும் அதன் வினைத்திறன் மற்றும் செயல் திறனில் காணப்பட்ட தோல்வி ஆகியவற்றின் அடிப்படையில் கிடைத்த அனுபவத்தின் பிரகாரமும் உலகின் தலை சிறந்த சொல் செயல் என்பதன் அடிப்படையிலும் செயற்பாட்டுக்கு வராத செயல்திறன் அற்ற 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் போலான 2020 ஆண்டு வரவு செலவுத்திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ள வெறும் வார்த்தைகளையும் தொகைகளையும் கொண்டு வரதராஜன் பார்த்திபன் ஆகிய என்னால் அதனை ஆதரிக்கவோ அல்லது விவாதிக்கவோ முடியாது என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்

Related Posts