யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று!!

யாழ். மாநகரசபையின் மேயரைத் தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (13) நடைபெறவுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டு என்பன ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளன.

அண்மையில் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் யாழ் மாநகரசபையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 10,370 வாக்குகளைப்பெற்று 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 9,124 வாக்குகளைப்பெற்று 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 7,702 வாக்குகளைப்பெற்று 10 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 3,567 வாக்குகளைப்பெற்று 4 ஆசனங்களையும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி 3,076 வாக்குகளைப்பெற்று 4 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன முறையே 587 மற்றும் 464 வாக்குகளைப்பெற்று தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று நடைபெறவிருக்கும் மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் 13 ஆசனங்களைப்பெற்ற இலங்கைத் தமிழரசுக்கட்சி, 12 ஆசனங்களைப்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் 10 ஆசனங்களைப்பெற்ற தேசிய மக்கள் சக்தி என்பன தத்தமது மேயர் வேட்பாளர்களைக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸுக்கு 4 ஆசனங்களைக் கொண்டிருக்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆதரவு வழங்கும்.

அதேபோன்று 4 ஆசனங்களைப்பெற்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், தலா ஒரு ஆசனத்தைப் பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் இதன்போது தேசிய மக்கள் சக்தி இரகசிய வாக்கெடுப்பைக் கோருவதற்கான சாத்தியம் காணப்படும் நிலையில், யாழ் மாநகரசபையைத் தாம் கைப்பற்றுவோமென தமிழரசுக்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related Posts