புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இது வரை கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களில் எவரும் தப்பிக்க முடியாது. பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் தப்பிக்கவே முடியாது. சட்டம் தன் கடமையை செய்யும். அதனால் பொது மக்கள் அமைதி காத்து பொலிஸாரின் விசாரணைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொலிஸார் யாழ் மக்களிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்.மக்களுக்கு விசேட செய்தியாக பொலிஸ் மா அதிபர் சார்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
‘மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிறப்பு பொலிஸ் குழுவினர் முதலில் மூவரை கைது செய்தனர். பின்னர் மேலும் ஐவரை கைது செய்தனர். அதன் பின்னர் வெள்ளவத்தையில் வைத்து மற்றொருவரையும் கைது செய்தனர். இந்த எல்லா சந்தேக நபர்களை யும் கைது செய்ய பொதுமக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் சந்தேக நபர்கள் எவரும் தப்பிக்க வாய்ப்பே இல்லை. விசாரணைகளில் சிலர் சந்தேகங்களை ஏற்படுத்தி பொதுமக்களை குழப்ப நினைக்கின்றனர். எனினும் கைது செய்யப்பட்டுள்ள எல்லா சந்தேக நபர்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எவர் தொடர்பிலும் பாரபட்சம் காட்டப்படமாட்டது. நாம் சந்தேக நபர்களை நீதிமன்றில் உரிய சாட்சியங்களுடன் ஒப்படைப்போம். குறிப்பாக சந்தேக நபர்கள் அனைவருக்கும் எதிராக கடத்தல், பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்களை பொலிஸார் சுமத்தியுள்ளனர்.
இந் நிலையில் சந்தேக நபர்களின் வீடுகளுக்கு தீவைத்தல்கள் ஊடாக அவர்களுக்கே அது நன்மையாக அமையும். ஏற்கனவே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் மூக்குக் கண்ணாடியும் காதணிகளும் பிரதான சந்தேக நபரின் வீட்டுக்குள் இருந்த நிலையில் அது அந்த வீடு எரிக்கப்பட்டதில் தீயில் எரிந்து அழிந்துவிட்டது. இந் நிலைமைகள் அவர்களுக்கே நன்மையைக் கொடுக்கும்.
அதனால் விபத்தின் போதோ, அல்லது இப்படியான கொடூரங்களின் போதோ பொதுமக்கள் சந்தேக நபரின் உடமைகளு க்கு தீ வைத்து அல்லது சேதம் விளைவிப்பதில் இருந்து தவிர்த்துகொள்ள வேண்டும்.
இந் நிலையில் இந்த வழக்கை பொலிஸார் மரபணு சாட்சியங்கள் ஊடாகவே முன்னெடுத்து செல்ல எதிர்பார்க்கின்றனர். இது சந்தேக நபர்களுக்கு எதிரான மிக முக்கியமான தடயம். எனவே பிரதேசத்தின் அமைதிக்கு பொதுமக்கள் உதவ வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.