Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுடன் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர்.

அதிலும் யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் உணவினை வழங்கிய போதும் அவர்களுக்கு உதவியாளர்களாக நிற்பவர்களது நிலை நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

யாழ். நகரிலுள்ள உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் ஒரு வேளை உணவுக்காக அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஊடகவியலாளர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் யாழ்.எய்ட் மனித நேய உதவி அமைப்பின் கவனத்திற்கு யாழ்.ஊடக அமையம் கொண்டு சென்றிருந்தது.

உடனடியாக விரைந்து செயற்பட்ட யாழ்.எயிட் அமைப்பினர் சமைத்த உணவுப் பொதிகளை நேற்று இரவுவேளை ஊரடங்குக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் சகிதம் எடுத்துச் சென்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றும் மதியம் மற்றும் இரவு உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அவர்களால் செய்யப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related Posts