Ad Widget

யாழ்.போதனாவில் மருத்துவ கழிவுகள் தேக்கம்?

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்.வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன் மணல் பகுதியில் யாழ்.மாநகர சபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை நிறுவுவதற்காக யாழ்ப்பாண மாநகர சபையுடன் ஒரு உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டு அது செயற்படுத்த தயாராக இருந்த நிலையில் மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் குறித்த கோம்பயன் மணல் இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்ட அனுமதிக்க முடியாது என குறித்த விடயம் தடைப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது லொறிகளில் ஏற்றப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts